
சிவராத்திரி விரதமும் அதன் பலன்களும்

சிவராத்திரி என்றால் சிவனுக்கு மிகவும் மங்களகரமான இரவு என்று பொருள். மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈச நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விஷேசம்.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது சக்திக்கும் உரியது என்பது நியமம். ஆனால், சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி சிவனுக்குரிய இரவாக போற்றி வணங்க படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவாறு சொல்லப்பட்டுள்ளது. சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கியதாகவும் அந்த நாளே சிவராத்திரி எனவும் வரலாறு உண்டு. ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் திருநீலகண்டர் என பெயர் பெற்றார். அன்றைய தினம் இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்தரி என கூறுவர்.. அடியினை தேடிய விஷ்ணுவும் முடியினை காணமுடியாமல் நின்ற பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்த தினமும் சிவராத்திரி என லிங்க புராணம் கூறுகிறது .
சிவராத்திரி விரதம் அனுட்டிக்கும் முறையானது பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. சிவராத்திரிக்கு முன்னைய நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்வது உசிதமாகும். சிவ பூஜை செய்யும் இடத்தை புஷ்பங்களால் அலங்கரித்து சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று சிவபுராணம், சிவ காயத்ரி மந்திரங்கள், சிவன் ஸ்லோகங்கள் படிப்பது எண்ணற்ற பலனை அளிக்கவல்லது. மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது மிக மிக கூடுதல் பலனை கொடுக்கும் . சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம். மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
1.முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;
2.இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;
3.மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;
4.நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;
முதல் கால பூஜை (சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)
பசும்பால், தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம்(பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;
சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால்,வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால்,பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால்,அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்;எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள்,சிவராத்திரி பூஜைக்கு பணம் அன்பளிப்பாக க் கொடுக்கலாம்;
இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்;ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால்,ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;
அதுவும் இயலாதவர்கள் ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;இதனால்,ருத்ரம்,ரிக் வேதம்,சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;
இரண்டாம் ஜாம(கால)பூஜை (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)
இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால்,நம்முடைய பிறவி முடிந்து,மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;
பால்,தேன்,சர்க்கரை,நெய்,தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்;ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;
இந்த அபிஷேகத்திற்கு,பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள்,தாய்ப்பால் பெறுவாள்;சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்;காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு;
சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது;
தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும்;
சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்;இதனால்,லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்;தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்;நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்;இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;
இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில்(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்;
ஒருவேளை,யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; சிவாய நம என்று இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;
மூன்றாம் ஜாம(கால) பூஜை (நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)
இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்;வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;
சாம வேதம் பாடவேண்டும்;சாமவேதம் தெரியாவிட்டால்,சிவயசிவ என்று நள்ளிரவு 12 முதல் பின்னிர்வு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;
போகின்ற உயிரை நிறுத்தவும்,விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;
இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்;இந்த நேரத்தில் யார் “சிவயசிவ;சிவயசிவ” என்று ஓதுகிறார்களோ,அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;
நான்காம் ஜாம(கால) பூஜை (பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)
கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்;மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்;வில்வத்தாலும்,நீலோற்பல மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்;பச்சரிசி சாதம் வடித்து,அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;
அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!
இதையும் பாட இயலாதவர்கள் சிவசிவ என்று ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;
இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும்,சிவராத்திரி விரதங்களை யாரொருவர் 24 ஆண்டுகள் தொடர்ந்து செய்கின்றார்களோ,அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம்,பூ தானம்,கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்;அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும்;அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்;அவர்களின் பரம்பரையும் குருவோடு சொர்க்கத்தை அடைவார்கள்;
சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது;இதன் படி,மகாசிவ ஆகமங்களும்,சிவபுராணங்களும் விவரிக்கின்றன;
சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;
சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்;
கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்;
சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும். காசியில் வீடு பேரடைந்த பலன் கிடைக்கும்.